போபால்:
மத்தியப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கான ‘வைபை’ (wi-fi) தொழில்நுட்ப வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் ஒப்பந்தம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு வழங்கப்பட்டதில், முறைகேடுகள் இருப்பதாக மத்தியப் பிரதேச தலைமைக் கணக்காளரின் தணிக்கை அறிக்கை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் என்பது முக்கியத் தரவுகளையும் தகவல்களையும் கொண்டதாகும், இந்நிலையில், அதன் ‘வைபை’ ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதன் மூலம் தரவுகளின் ரகசியத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை குறித்த ஐயங்களையும் தலைமைக் கணக்காளர் தனது அறிக்கையில் எழுப்பியுள்ளார்.
ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பான விஷயத்தில், துறைத்தலைமையின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை குற்றச்சாட்டு வைத்துள்ளது.
அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலத்தில் இந்த தணிக்கை நடத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்சிக்காலம் என்பது, மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்த காலமாகும்.
தேர்தல் அலுவலகம் என்பது அரசமைப்பு சார்ந்த அமைப்பு என்ற நிலையில், தனியார் நிறுவனத்துக்கு வைபை சேவையை வழங்கியதன் மூலம் தரவுகளுக்கு என்ன பாதுகாப்பு என்று தலைமைத் தேர்தல் அலுவலகத்திடமும், தலைமைக் கணக்காளர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் தடுப்புகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்திய செலவினத்தில் ஒழுங்கான தர்க்கம் எதுவும் இல்லை; வாக்குச்சாவடிகளில் இந்த தடுப்பு, மறைப்பு அமைப்புகளை பிளெக்ஸ் போர்டுகளில்தான் வைக்க வேண்டும் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலாகும்; அவ்வகைத் தடுப்புகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பாதுகாப்பு, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக முழுத்தடுப்பாக இருக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் இந்த குறிப்பு அறிவுறுத்தல்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்றும் தலைமைக் கணக்காளர் அறிக்கை குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளது.
அச்சடிப்பு செலவாக ரூ. 18 லட்சம் ஆகியுள்ளது, இது தவிர்க்கப்பட வேண்டிய செலவு என்று சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை, கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது பயிற்சிக்கான பொருட்கள் வாங்குவதில் ரூ. 50 லட்சம் செலவு காட்டியதிலும் முறைகேடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.மேலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மத்தியப்பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் கொடுக்கப்பட்டதற்கான பயன்பாட்டுச் சான்றிதழும் வரப்பெற்றிருக்கவில்லை என்று அறிக்கை தெரிவித்துள்ளது.